மன்கட் முறை
3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 118/9 விக்கெட்களை இழந்துவிட்டது. ஆனால் கடைசி விக்கெட்டிற்கு மட்டும் சார்லட் டீன் மற்றும் ஃப்ரேயா டேவீஸ் 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது தான் அவர்களை பிரிப்பதற்காக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையை கையில் எடுத்தார்.
குவிந்த விமர்சனங்கள்
அதாவது ஆட்டத்தின் 43.4வது பந்தில் தீப்தி சர்மா பந்துவீசுவதற்கு முன்னதாகவே நான் ஸ்டிரைக்கர் நின்றிருந்த டியான் எல்லைக்கோட்டை விட்டு வெளியே நடந்துவிட்டார். அப்போது ஸ்டம்பிங் செய்து மன்கட் முறையில் அவுட்டாக்கினார். இதற்கு பல சர்ச்சைகள் கிளம்பின. அதாவது தீப்தி சர்மா ஏமாற்றி விக்கெட் எடுத்துள்ளார். இது கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு எதிரானது என இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் குற்றம்சாட்டினர். எனினும் இது ஐசிசி விதிப்படி நியாயமான ஒன்று தான்.
தீப்தியின் விளக்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தீப்தி சர்மா முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். அதில், இது வரலாற்று வெற்றி தான். மன்கட் முறையை பயன்படுத்துவது என்பது தான் எங்கள் திட்டம். ஆனால் இதுகுறித்து பல முறை நடுவர்களிடமும், இங்கிலாந்து வீராங்கனை சார்லட் டீனிடமும் எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அதனை செய்ததால் தான் மன்கட் செய்தேன்.
எங்களின் திட்டம்
அனைத்து அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கும். நாங்களும் ஜுலான் கோஸ்வாமியின் கடைசி போட்டியை ஒரு சாதனையுடன் முடிக்க வேண்டும் என நினைத்தோம். அதனை செய்துக்காட்டினோம். நாங்கள் செய்தது தவறு கிடையாது என தீப்தி சர்மா கூறியுள்ளார்.