ஷிகர் தவான் விளக்கம்
கிரிக்கெட் மற்றும் உடலை வலுப்படுத்துவது உள்ளிட்டவற்றை காட்டிலும், மன ஆரோக்கியத்திற்காக தான் அதிகமாக மெனக்கெடுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
முக்கிய வீரர் ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் கவனிக்கத்தக்க வீரராக ஷிகர் தவான் விளங்கி வருகிறார். சர்வதேச போட்டிகளில் இவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதன்மூலம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
"என்னுடைய வழியில் வருவதை ஏற்கிறேன்"
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தான் எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை என்று கூறியுள்ள ஷிகர் தவான், தன்னுடைய வழியில் வருவதை தான் அப்படியே ஏற்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னுடைய பயிற்சிகளை துவங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மீகத்தில் நம்பிக்கை
ஆன்மீகத்தில் தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஷிகர் தவான், வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்வது என்பது குறித்த புரிதல் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
"கவனமற்ற மனிதனல்ல"
தான் வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொள்வதாக கவலையற்ற மனிதனாக விளங்குவதாக தெரிவித்த ஷிகர் தவான், ஆனால் தான் கவனமற்ற மனிதனல்ல என்றும் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஆடும்போது முழுக்கவனம்
கிரிக்கெட்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்ட ஷிகர் தவான், இந்த இடைவெளிகளில் தன்னுடைய மற்ற பொழுதுபோக்குகளான புல்லாங்குழல் வாசிப்பது, குதிரையேற்றம் மற்றும் நடனத்தில் தான் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தால், தன்னுடைய கவனம் முழுவதும் அதிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் திறன்
மன ஆரோக்கியத்தில் தான் அதிக கவனம் செலுத்துவதால் கிரிக்கெட் மற்றும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தான் எளிதாக கடந்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்து செல்ல வேண்டும்
வாழ்க்கை அனைவருக்கும் பல சவால்களை அளிப்பதாக தெரிவித்துள்ள ஷிகர் தவான், அந்த சவால்களை எதிர்கொண்டு, அதை கடந்து வெளிவர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.