ஏகப்பட்ட குளறுபடி
வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டதை அடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஏனெனில், மும்பை ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன்பு, ஒவ்வொரு வீரர்களும் தனித்தனியாக மூன்று RT-PCR சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். அதில், மூன்றிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ கறாராக கூறியிருந்தது. அப்படி எவருக்காவது பாஸிட்டிவ் என்று வந்திருந்தால், அவர் அணியில் இணைந்திருக்க முடியாது. ஒருவேளை கேப்டன் கோலி போன்ற மிக முக்கிய வீரர்களுக்கு அப்படி வந்திருந்தால், தொடரில் ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டிருக்கும். இந்த டென்ஷன் எதுவும் இல்லாமல், இப்போது தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்திருப்பது உண்மையில் பெரிய சாதனை தான். ஆனால், இனிமேல் தான் உண்மையான சோதனை காத்திருக்கிறது.
நல்ல பாடம்
இப்போது ஹோட்டலில் கடுமையான பயோ-பபுள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸோ, இந்த 14 நாள் தனிமைப்படுத்தலில் எவருக்காவது வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்கள் எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும், இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், ஐபிஎல் ஏற்படுத்திய காயம் அத்தகையது. அதில், பிசிசிஐ நல்ல பாடம் கற்றுக்கொண்டது.
தொடர் ஒத்திவைப்பு
ஐபிஎல் 2021 தொடரில் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தொடங்கிய பயோ-பபுளில் விதிமுறைகள் கடுமையாக இருந்தன. ஆனால், அனைத்தையும் தகர்த்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை அட்டாக் செய்தது. சரி.. அவரை தனிமைப்படுத்தி தொடரை நடத்தலாம் என்று பிசிசிஐ சிந்திக்கக் கூட நேரம் தராமல், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர் என்று அடுத்தடுத்து கொரோனா போட்டுத் தாக்க அரண்டு போன பிசிசிஐ, தொடரை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை
இந்த நிலையில் தான் இங்கிலாந்து டூருக்கான பயோ - பபுள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தலில், வீரர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். பிறகு, ஒவ்வொரு பேட்ச் பேட்சாக பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஹோட்டல் - பயிற்சி இடம் - ஹோட்டல். இதுதான் வீரர்களது தினசரி நடவடிக்கையாக இருக்குமாம். இதற்கிடையில், வீரர்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்ல முடியாத வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் எவரையும் வீரர்கள் பார்க்க அனுமதி கிடையாது. அது குடும்பம் சார்ந்த மிக அவசர விஷயமாக இருந்தாலும், அவர்கள் வீரர்களை நேரடியாக சந்தித்து பேச முடியாதாம். இவ்வளவு ஸ்ட்ரிக் நடவடிக்கைக்கு காரணம், ஐபிஎல் பயோ-பபுள் தோல்வி தான். இம்முறை அதுபோன்று அந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக உள்ளதாம் பிசிசிஐ. குறிப்பாக, அதன் தலைவர் கங்குலி எப்படியாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரையும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் எந்த சிக்கலுமின்றி நடத்திவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளாராம்.