வந்திறங்கிய வீரர்கள்
இந்த நிலையில், இங்கிலாந்து தொடருக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நேற்று மும்பையில் தொடங்கியது. இதற்காக, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும், இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகளை அழைக்க, பிசிசிஐ சார்ட்டர் விமானங்களை அனுப்பியது. டெல்லி, சென்னை, ஹைதராபாத்தில் இருந்து வீரர்கள் அழைத்துவரப்பட்டனர். இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், மாயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், பாரத் அருண் ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.
அனுமதி இல்லை
ஜுலன் கோஸ்வாமி, இந்திராணி ராய் ஆகியோர் கொல்கத்தாவில் இருந்து கமர்ஷியல் விமானம் மூலம் மும்பை சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று (மே.19) புதன்கிழமை முதல், மும்பையில் 14 நாட்களுக்கான பயோ-பபுளில் இணைந்தனர். வீரர்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்ல முடியாத வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் எவரையும் வீரர்கள் பார்க்க அனுமதி கிடையாது.
RT-PCR டெஸ்ட்
மும்பை, புனே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் மே 24ம் தேதி பயோ - பபுளில் இணைந்தால் போதும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மும்பையில் வசிக்கும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே, ரவி சாஸ்திரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் 24ம் தேதி இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அனைத்து வீரர்களும் RT-PCR டெஸ்ட்டின் நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
மீண்டும் 10 நாட்கள்
இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்பு, ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் ஆறு RT-PCR டெஸ்ட் நெகட்டிவ் ரிசல்ட் ரிப்போர்ட் கையில் வைத்திருக்க வேண்டும். வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கு இத்தனை சோதனைகளை தனித்தனியாக எடுப்பதற்கு என்றே, ஒரு தனி ஏஜென்சியை பிசிசிஐ தேர்வு செய்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. இங்கிலாந்து சென்று பிறகு அங்கு மீண்டும் 10 நாட்கள் குவாரண்டைனில் அனைவரும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.