தோஹா, கத்தார்: கத்தாரில் தனது திருமண நாளின்போது கிரிக்கெட் விளையாடிய 32 வயது இந்தியர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த செயல் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமோத் தெரயில். இவர் வெள்ளியங்கோடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள மதினாத் கலீபாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் எலக்ட்ரீசியஷனாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு நேற்று திருமண நாள். இந்த சந்தோஷத்துடன் தோஹாவில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் தனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார் பிரமோத். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. அப்படியே நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்தது. தனது குழந்தையைப் பார்த்து விட்டு, 2 மாதங்களுக்கு முன்புதான் விடுமுறை முடிந்து கத்தார் திரும்பியிருந்தார் என்று அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். பிரமோத்தின் உடலை கேரளாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.