இந்தியா உள்ளிட்ட 6 அணிகள்
சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்வகையில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் இணைந்து சாலை பாதுகாப்பு உலக தொடரில் விளையாடவுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது.
இந்தியா -வங்கதேசம் மோதல்
முதல் போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் மற்றும் வங்கதேச ஜாம்பவான்கள் விளையாடவுள்ளனர். தொடரின் அனைத்து போட்டிகளும் ஷாகித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி மார்ச் 6ம் தேதி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களுக்கிடையில் நடைபெறவுள்ளது.
மீண்டும் தொடர் துவக்கம்
கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடர் மீண்டும் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளின் ஜாம்பவான்களும் தற்போது அறிவிக்கப்பட்டு போட்டி துவங்க தயாராகவுள்ளது.
சச்சின், சேவாக் பங்கேற்பு
இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கையிஃப், பிரக்யான் ஓஜா, பத்ரிநாத், வினய் குமார், யூசுப் பதான் உள்ளிட்ட 13 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வினய் குமார், யூசுப் பதான் மற்றும் ஓஜா ஆகியோர் சமீபத்தில் தங்களது ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.