இப்போதே ஜடேஜா
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி மிக மோசமாக தடுமாறி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இப்போதே களத்தில் ஜடேஜா நின்றுக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் விக்கெட்
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல், ஹெட்டிங்லேவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சுத்தமாக எந்த க்ளூவும் இன்று அவுட்டாகி வெளியேறினார். பந்தை டிஃபண்ட் செய்தாலே, எட்ஜ் ஆகி கேட்ச் கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். அதே நடுக்கம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. ஆனால், முதலில் அவுட்டானது ரோஹித் ஷர்மா தான். க்றிஸ் வோக்ஸின் ஒரு சாதாரண வெளியே சென்ற ஷாட் பிட்ச் பந்தில் எட்ஜ் ஆகி ஏமாந்து 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
கோலி, ஜடேஜா
பிறகு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து, தலையை ஆட்டிக் கொண்டே வெளியேறிவிட்டார். 39 ரன்களுக்கெல்லாம் இந்திய அணி 3 விக்கெட்டை இந்திய அணி இழந்துவிட்டது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஒரு சர்பிரைஸ் மூவ் என்னெவெனில், வழக்கமாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரஹானே இம்முறை களமிறங்கவில்லை. அவருக்கு பதில், 7வது டவுனில் களமிறங்கவிருந்த ஜடேஜாவை களமிறக்கி விட்டுள்ளனர். லன்ச்சுக்கு முன்பு வரை கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சமாளிக்குமா இந்தியா?
இங்கிலாந்து அணி இதே ஆக்ரோஷத்தில் பந்து வீசினால், இந்தியா இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்பாகவே ஆல் அவுட்டாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. முதல் தர போட்டிகளில் 3 முச்சதம் வரை அடித்திருக்கும் ஜடேஜா, இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி அட்லீஸ்ட் அரைசதம் அடித்தால் கூட, இந்திய அணிக்கு அது மிகப்பெரிய நல்ல விஷயமாக அமையும். இந்தியா சமாளிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.