2வது ஒருநாள் சர்வதேச போட்டி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மருத்துவர்கள் ஆலோசனை
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியை அடுத்து தன்னுடைய முதுகில் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தீபக் சஹாருக்கு பிசிசிஐ மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் சில நாட்கள் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தினர்.
தீபக் சஹார் ஓய்வு
இதையடுத்து வரும் 22ம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ள மேற்கிந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் தீபக் சஹார் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த நவ்தீப் சாய்னி
தீபக் சஹாருக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த இளம் வீரர் நவ்தீப் சாய்னி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்குவார் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபக் சஹாருக்கு ஓய்வு அவசியம்
கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் தீபக் சஹார் மொத்தமாக 2 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார். இதேபோல ஓவருக்கு சராசரியாக 6 ரன்களையும் அளித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஓய்வு அவசியம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நவ்தீப் சாய்னி அபாரம்
இந்நிலையில் ஆந்திராவிற்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நவ்தீப் சாய்னி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 36 ஓவர்களையும் போட்டுள்ளார்.
பலமிழக்கும் பந்துவீச்சு
ஏற்கனவே பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சே தோல்விக்கு காரணமாக கூறப்படும் நிலையில், தற்போது பந்துவீச்சில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.