இலங்கை சுற்றுப்பயணம்
இலங்கையில் ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகளிலும், ஜூலை 22 முதல் ஜூலை 27ம் தேதி வரை 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 'பி' அணியை வழிநடத்தும் கேப்டன் யாராக இருக்கும் என்ற கேள்வி தான் சமீப நாட்களாக இணையத்தில் உலா வருகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த அணிக்கு கேப்டனாக செயல்பட ஸ்ரேயாஸ் ஐயர் தான் முதல் தேர்வாக உள்ளார். ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற அறுவைசிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைய 4 மாதங்கள் ஆகும் எனக்கூறப்படுகிறது. எனவே இலங்கை தொடருக்கு முன்னதாக அவர் குணமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு.
குழப்பம்
இந்நிலையில் ஸ்ரேயாஸுக்கு அடுத்ததாக ஷிகர் தவான் மற்றும் ஹர்திக்கிற்கு அந்த வாய்ப்பு செல்லவுள்ளது. ஷிகர் தவான், நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஃபார்மில் இருந்தார். அதே போல இந்திய அணியிலும் சீனியர் ப்ளேயர் ஆவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் விருப்பமான தொடக்க வீரராக உள்ளார். அதே போல ஹர்திக் பாண்டியாவுக்கும் சர்வதேச போட்டிகளில் நல்ல அனுபவம் உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அவருக்கு அனுபவம் இருப்பதால் எளிமையாக கையாள முடியும் எனக்கூறப்படுகிறது.
சஹார் விருப்பம்
இந்நிலையில் யார் கேப்டனாக செயல்பட வேண்டும் என தீபக் சஹார் வாய் திறந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஷிகர் தவான் கேப்டனாக செயல்படலாம். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. என்னைப்பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த வீரர்களே அணியை வழிநடத்தவேண்டும். ஏனென்றால் அணி வீரர்கள் சீனியர் வீரருக்கு தகுந்த மரியாதை கொடுப்பார்கள். அவர் சொல்வதை மதித்து செய்வார்கள். எனவே தவான் தான் எனது முதல் தேர்வு எனக்கூறியுள்ளார்.
நான் தயார்
மேலும் பேசிய தீபக் சஹார், நான் இலங்கை தொடருக்கு தயாராக உள்ளேன். ஐபிஎல்-ல் நன்றாக பந்துவீசியுள்ளேன். அதே ஃபார்ம் என்னிடம் அப்படியே உள்ளது. என்னைப் பொறுத்தவரை அனுபவம் நல்ல தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்தவகையில் என்னிடம் தற்போது நல்ல அனுபவம் உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். அதே போல இந்திய 'ஏ' அணியும் மெயின் அணியை போலவே பலமாக உள்ளதால் நிச்சயம் தொடரை கைப்பற்றும்.