குடும்பத்துடன் டூர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்ற பிறகு, இங்கிலாந்து தொடருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் மீதம் இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. இந்த 10 நாட்களுக்கு வீரர்கள் பயோ-பபுளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
10 நாட்கள் தனிமை
இதனால், இந்த 10 நாட்களை குடும்பத்துடன் இங்கிலாந்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "இங்கிலாந்தில் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், நல்லவேளையாக இருவருமே இப்போது நலமுடன் உள்ளனர். அதில் ஒருவருக்கு இப்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு மீண்டும் ஜுலை 18ம் தேதி கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அன்றோடு அவருக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தலும் முடிவடைவதாக" குறிப்பிட்டுள்ளது.
டெல்டா வைரஸ்
எனினும், பாதிக்கப்பட்ட அந்த இரு வீரர்கள்யார் என்பது குறிப்பிடப்படவில்லை. அதில் ஒருவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால், அவர் மட்டும் தொடர்ந்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் இந்திய அணியுடன் இணைந்து டுர்ஹாம் செல்ல வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட வீரருக்கு, இங்கிலாந்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தான் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட வாய்ப்பில்லை
இதையடுத்து, அந்த வீரருடன் நெருக்கமாக இருந்த மற்ற வீரர்களையும் அணி நிர்வாகம் தீவிரமாக கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி, அந்த வீரர், இப்போது இந்திய அணியுடன் இணைந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வீரர்களின் ஓய்வறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டிருப்பதால், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.