குவாரன்டைனில் இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள், தற்போது குவாரன்டைன் மற்றும் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வரும் 27ம் தேதி துவங்கவுள்ள ஒருநாள், தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளனர்.
முதல் போட்டியில் பங்கேற்கும் கோலி
4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் அடுத்த மாதம் 17ம் தேதி துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி, அடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பவுள்ளார்.
நெருக்கடியை தரும்
இதை தொடர்ந்து அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு இந்த போட்டிகள் அதிக நெருக்கடியை தரும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் விராட் கோலியின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷமி, பும்ரா சிறப்பு
டெஸ்ட் போட்டிகளில் முகமது ஷமி, பும்ரா முக்கிய வீரர்களாக உள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்டால் இஷாந்த் சர்மாவும் முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்படுகிறது. மேலும் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனியும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்விகள் உள்ளதாக பாண்டிங் கருத்து
இந்நிலையில் கோலி இல்லாத டெஸ்ட் போட்டிகளின் நிலை மற்றும் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புவது போலவே தனக்கும் கேள்விகள் உள்ளதாக பாண்டிங் கூறியுள்ளார். பகலிரவு போட்டியில் எந்த ஸ்பின்னர் தேர்வு செய்யப்படுவார் உள்ளிட்ட கேள்விகள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.