எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இந்தியத் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ் பெற்றவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு தமிழ் ரசிகர்கள் அல்லாது இந்தியாவின் பல்வேறு மொழி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் அவருக்காக இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
75வது பிறந்தநாள்
கடந்த ஜூன் 4ஆம் தேதி பாலசுப்ரமணியத்தின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல்கலை இணையத்தில் பகிர்ந்து பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும், எஸ்.பி.பி பிறந்த நாள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஜடேஜாவுக்கு பிடித்த பாடல்
அப்போது பேசிய அஸ்வின், நான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது தமிழ் பாடல்களைக் கேட்பது வழக்கம். சமீபத்தில் நான் உடற்பயிற்சி மேற்கொண்ட போது ஜடேஜாவை சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய பாடல் லிஸ்டை கண்டார். பின்னர் அவர் என்னிடம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறி, அதுகுறித்து விசாரித்தார் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஜோடி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை இங்கிலாந்து சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.