வாய்ப்பே இல்லை
கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது, சுழற்பந்துவீச்சில் முதன்மை தேர்வாக இருந்தவர் குல்தீப் யாதவ். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடிய நிலையில், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று. ஆனால் இங்கு நடைபெற்ற போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
குல்தீப் விளக்கம்
இந்நிலையில் தனது நிலை குறித்து குல்தீப் யாதவ் மனம் உருகி பேசியுள்ளார். அதில் அவர், பயிற்சியாளருக்கு என்னை பற்றி தெரிந்து, நீண்ட நாட்கள் பழகி இருந்தால், எனது ஆட்டம் குறித்து தெரிந்திருக்கும். ஆனால் இங்கு அதிலே மிகப்பெரும் இடைவெளி உள்ளது. சில சமயங்களில் நான் அணியில் இடம் பெறுகிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியாது. மேலும் என்னிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்றும் தெரியாமல் குழம்பி இருப்பேன்.
விதி
சில போட்டிகளில் நான் நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும், அப்படி விளையாடி இருந்தால் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருக்கலாம் என்று தோன்றும். ஆனால் விளையாடுவதற்கான வாய்ப்புகள் ஏன் கிடைக்கவில்லை என்று கூட எனக்கு தெரியாது. இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக எங்களுக்கு அணி நிர்வாகம் விளக்கம் தரும். ஆனால் ஐபிஎல்-ல் அப்படி இல்லை.
விளக்கம் தரவில்லை
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக நான் அணி நிர்வாகத்திடம் பேச வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போட்டிகளின் போது யாருமே எனக்கு விளக்கம் கொடுக்கவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது கொல்கத்தா அணியில் நிறைய ஸ்பின்னர்கள் தேவை. ஆனால் என் மீது யாருமே நம்பிக்கை வைக்கவில்லை, எனது திறமையை யாரும் நம்பவில்லை என பல்வேறு சமயங்களில் எனக்கு தோன்றும்.
இந்திய கேப்டன்
கொல்கத்தா அணியில் இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக செயல்பட்டால், இந்திய வீரர்களுக்கு சுலபமாக இருக்கும். அதாவது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால், நான் நேரடியாக அவரிடம் சென்று எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என சுதந்திரமாக கேட்பேன். ஆனால் இயான் மோர்கன் என்னை எப்படி பார்க்கிறார் என்றே தெரியவில்லை. பேசிக்கொள்வது இல்லை என குல்தீப் யாதவ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வாய்ப்பு
ஐபிஎல் தொடரை போலவே இந்திய அணியிலும் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டிலும் அதன் பிறகு ஜூலையில் இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பையில் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.