மீண்டும் ஏமாற்றம்
இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, காயமடைந்திருக்கும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் 2 மாற்றங்களும், வேகப்பந்துவீச்சு யூனிட்டில் தான் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு , கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ஆர்வலர்களிடையுமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அஷ்வின் வாய்ப்பு மறுப்பு
இந்த லண்டன் ஓவல் பிட்ச், விளையாட விளையாட மெதுவான தன்மை கொண்ட பிட்சாக மாறிவிடும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனால், இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜடேஜாவுக்கு கடந்த மூன்றாவது போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதில் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஜடேஜா விளையாடினாலும், நிச்சயம் அஷ்வின் விளையாடுவர் என்றே தகவல்கள் வெளியாகின. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூட, "அஷ்வின் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவரை சமாளிக்கும் வகையில் நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம். அஷ்வினை சமாளிக்க தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார். ஆனால், இப்போட்டியில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை.
கண்மூடித்தனமான நம்பிக்கை
ஏன் மீண்டும் மீண்டும் விராட் வீம்பு செய்கிறார் என்று பலரும் சமூக தளங்களில் பதிவிடுவதை காண முடிகிறது. ஆனால், கோலியை பொறுத்தவரை தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறார். இவர் இதைச் சொல்கிறார், அவர் அதைச் சொல்கிறார் என்பதற்காக எதையும் மாற்றிக் கொள்ள மாட்டார். அவரைப் பொறுத்தவரை, இங்கிலாந்து ஆடுகளங்களில் அஷ்வினை விட ஜடேஜா சிறப்பாக செயல்படக் கூடியவர் என்று உறுதியாக நம்புகிறார். பேட்டிங்கில் அஷ்வினை விட சிறப்பானவர் என்றும், பவுலிங்கில் ஓரளவுக்கு அஷ்வினை மீட் செய்து விடுவார் என்றும் ஜடேஜாவை கோலி நம்புகிறார். கண்மூடித்தனமான நம்பிக்கை அது.
உமேஷ் யாதவ்
அதனால், அஷ்வினை சேர்க்கச் சொல்லி எத்தனையோ குரல்கள் எழுந்தாலும், கோலி தனது முடிவில் தான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். அதுமட்டுமின்றி, அனைவரும் எதிர்பார்த்தது போல, ரஹானே மற்றும் புஜாரா இடத்தில் எந்த மாற்றத்தையும் விராட் கோலி ஏற்படுத்தவில்லை. அவர்களது வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதில், யாருமே எதிர்பார்க்காத மற்றொரு ட்விஸ்ட் உமேஷ் யாதவ் சேர்க்கபப்ட்டிருப்பது தான். உமேஷ் என்று ஒருவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருக்கிறார் என்று எவருக்குமே தெரியாது என்று நினைக்கிறேன். மேலோட்டமாக கிரிக்கெட் ஸ்கோரை மட்டும் அவ்வப்போது பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் உமேஷ் அணியில் இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், அவருக்கு இந்த போட்டியில் அணியில் இடம் கிடைத்துள்ளது.