4 போட்டிகளை கொண்ட தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ள நிலையில், முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சென்னையில் உள்ளனர்.
கொரோனா பரிசோதனைகள்
கடந்த வாரத்தில் சென்னை வந்த இந்திய வீரர்களுக்கு 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்ட நிலையில், தற்போது குவாரன்டைன் முடிந்துள்ளது. மேலும் அவர்களுக்கு 5 முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
நாளை முதல் துவக்கம்
இந்நிலையில் அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து இன்றைய தினம் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை முதல் நெட் பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடும் வீரர்கள் பயோ பபள் முறையையும் கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா?
வரும் 5ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் அடுத்தடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு லைவ் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.