கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடரின் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த தொடர் மீண்டும் எங்கே எப்போது நடைபெறும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
வரும் 11ம் தேதி துவக்கம்
இந்நிலையில் அடுத்ததாக வரும் மாதம் 11ம் தேதி துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடவடிக்கையில் தற்போது பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வீரர்கள் தேர்வு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட தொடர் போன்றவற்றை சேர்த்து இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இன்றைய தினம் கூடவுள்ள இந்திய தேர்வுக்குழு 25 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர். தொடர்ந்து இன்றைய தினம் அணி விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் அறிவிப்பு
இந்த அணியில் 4 துவக்க வீரர்கள், 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், 9 வேகப்பந்து வீச்சாளர்கள், 5 ஸ்பின்னர்கள், 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளிட்ட 25 பேரை தேர்வுக்குழுவினர் இன்றைய தினம் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள ஹர்ஷல் படேலுக்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகவே பயணம்
இதேபோல கடந்த தொடரில் இடம்பெற்ற பிரசித் கிருஷ்ணாவுக்கும் இந்த தொடரில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணி ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மாறாக கொரோனா மற்றும் லாக்டவுன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முன்னதாகவே பயணம் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.