வானிலை
இங்கிலாந்தின் வானிலை என்பது எப்போதும் புரியாத புதிர் தான். ஒரே நாளில் எப்போது மழை பெய்யும், எப்போது வெய்யில் அடிக்கும், எப்போது ஈரப்பதம் இருக்கும் என்று எளிதில் எவராலும் கணிக்க முடியாது. இங்கிலாந்தில் நீங்கள் எந்த நகரில் விளையாண்டாலும் சரி, எந்த ஸ்டேடியத்தில் விளையாண்டாலும் சரி, அது லார்ட்ஸ் ஆகட்டும், லீட்ஸ் ஆகட்டும், சவுத்தாம்ப்டன் ஆகட்டும், பிரிஸ்டோல் ஆகட்டும். எந்த களமாக இருந்தாலும் அங்கு வானிலை பிரெடிக்ட் செய்ய முடியாது.
ரோஹித் ஷர்மா
ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஷனில் பந்து ஸ்விங் ஆகும், இரண்டாவது செஷனில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். மூன்றாவது செஷன் மீண்டும் பவுலிங்கிற்கு ஆதரவாக இருக்கும். இங்கிலாந்தின் நகரும் மேகங்கள், பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் ஒரு 'டெட்லி ஹெல்' என்றால் அது மிகையல்ல. அந்த நேரத்தில் ஒரு மிகச் சாதாரண பவுலர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும். அசையும் மேகங்கள், பந்துகளை வாகாக ஸ்விங் செய்ய வைக்கும். ரோஹித் ஷர்மா போன்று கால்களை அதிகம் நகர்த்தாத வீரர்களுக்கு இங்கிலாந்து கண்டிஷன்ஸ் எப்போதும் எமன் தான்.
லோ ஆர்டர் பலம்
யுவராஜ் சிங், இர்பான் பதான் போன்ற வீரர்கள் எச்சரிப்பதும் இதைத் தான். இளம் வீரர்களான ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால், ரிஷப் பண்ட் போன்றோருக்கு இத்தொடர் பெரும் சவால் தான். இந்த இடத்தில் தான் இரண்டு முக்கிய வீரர்களை தவறவிடுகிறோம். ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. மற்றொருவர் புவனேஷ் குமார். இங்கிலாந்து போன்ற மூவிங் கண்டிஷனில், புவனேஷ் போன்ற அட்டகாசமான ஸ்விங் பவுலர் இல்லாதது நமக்கு பெரிய இழப்பு. ஹர்திக் பாண்ட்யா ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர். அவரது மீடியம் பேஸ் பவுலிங், அணிக்கு பெரியளவில் கைக்கொடுக்கும். தவிர, பேட்ஸ்மேன்கள் தடுமாறும் நேரத்தில் கன்னாபின்னா வென சுற்றி வாணவேடிக்கை காட்டவும் அவருக்கு தெரியும். அந்த வகையில், இப்போது லோ ஆர்டரில் இருக்கும் ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே. பாண்ட்யாவும் அணியில் இருந்தால், லோ ஆர்டர் பலம் உச்சக்கட்டம் அடைந்திருக்கும்.
நம்பிக்கை
ஆனால், இந்திய அணியோ எந்தவித பயிற்சி போட்டிகளும் இன்றி, நேரடியாக ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. அதேசமயம், நியூஸிலாந்து அணியோ, இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது. அப்படியெனில், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்று நீங்கள் யோசிச்சுக்கோங்க. எனினும், விராட் கோலியும் சரி, ரவி சாஸ்திரியும் சரி, இந்திய அணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்!