கெம்ஸ்போர்டு: இந்திய அணி பயிற்சி ஆட்டம் நடக்கும் பிட்ச் மோசமான நிலையில் இருப்பதால், நான்கு நாள் போட்டி, மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது என செய்திகள் வந்தன. இந்த செய்திகள் குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாது. எந்த களத்திலும் விளையாட இந்திய அணி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது எசக்ஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் மைதானத்தில் பிட்ச் மற்றும் வெளிப்புற பகுதிகள் அதிக புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மோசமான பிட்ச்-இன் காரணமாகவே இந்திய அணி நான்கு நாள் போட்டியை மூன்று நாள்களாக குறைத்ததாக கூறப்பட்டது.
ஆனால், இங்கிலாந்தில் நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாகவே இந்திய அணி போட்டி நாள்களை குறைத்ததாக தெரிகிறது. இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, எந்த சூழ்நிலையிலும் கடைசியாக புகார் அளிப்பது இந்திய அணியாகத்தான் இருக்கும் என தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரவி சாஸ்த்ரி, "என் தத்துவம் மிகவும் எளிமையானது. உங்கள் நாட்டில் நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். என் நாட்டில் நீங்கள் எந்த கேள்வியும் கேட்காதீர்கள். மைதான பராமரிப்பாளரிடம், அப்படியே விட்டுவிடுங்கள், எதையும் மாற்ற தேவையில்லை என கூறிவிட்டேன். இந்த தொடரில் பிட்ச் அல்லது சூழ்நிலைகளை காட்டி இந்திய அணி தப்பித்துக் கொள்வதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். எங்கள் சவால் வெல்வது மட்டுமே. நான் தெளிவாக சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு இடத்திலும் கடைசியாக புகார் அளிப்பது இந்திய அணியாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், எதற்காக நான்கு நாள் போட்டி, மூன்று நாள்களாக குறைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பயிற்சி செய்யும் நாள்கள் குறைவாக இருப்பதால் அவ்வாறு குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறினார். இதனால், முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் இடத்திற்கு முன்னதாகவே சென்று, அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்ள அது உதவும் என்றும் கூறினார்.
இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 1, பிர்மிங்காம் நகரில் நடக்க உள்ளது.