டீம் ரெடி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால், இதில் கோலி அணி பரிதாபமாக தோல்வி அடைய, கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவேளைக்கு பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ரெடியாகி உள்ளது.
சூர்யா, ஷா
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஷ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரிதிமான் சாஹா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், ஷுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தகவல் இல்லை
ஆனால், இலங்கை டூரில் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருடன் நெருக்கமாக இருந்த எட்டு வீரர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சூர்யகுமாரும், ஷாவும் அடக்கம். ஆகையால் அவர்கள் எப்போது இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. குழப்பமே நீடிக்கிறது.
அணியில் யாருக்கு வாய்ப்பு?
இந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப் போகும் வீரர்கள் யார் யார் என்பதில் அதன் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான மாதிரி இந்திய பிளேயிங் லெவன் வெளியாகியுள்ளது. இதில், ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட், ஆர் அஷ்வின், ஷர்துல் தாக்கூர்/ஆர் ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
ஷர்துலுக்கு வாய்ப்பு?
குறிப்பாக, இந்த அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கிய ஜடேஜாவால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்பதால், இங்கிலாந்துக்கு எதிராக ஷர்துல் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயம், அஷ்வின் நிச்சயம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வல்லமை பெற்றவர்
இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ESPNCricinfo-விடம் பேசுகையில், "நான் மற்றவர்கள் சிந்திப்பது போல் அல்லாமல், வேறு மாதிரி சிந்திப்பதாகவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற ஒருவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய வீரராக இருக்கும் போது, நாம் வேகப்பந்து வீச்சுக்கு சற்று மிகையாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், ஸ்பின் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அஷ்வின் டன் கணக்கில் ஓவர்களை வீசும் வல்லமைப் பெற்றவர்.
ஸ்டெய்ன் கணிப்பு
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள், வேகப்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த நிலைமைகளில் விளையாடுவதில் மிகவும் சிறப்பான அணிகளாகும். ஆனால், ஸ்பின் விளையாடுவதில் முனைப்பு காட்டுவதில்லை. எனவே, அஷ்வின் இந்தத் தொடரில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய டிரம்ப் கார்டாக இருக்கலாம். அதேசமயம், இங்கிலாந்து அணியால் ரிஷப் பண்ட்டை வெளியேற்றக்கூடிய ஒரு ஸ்பின்னரை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? எனவே இந்தத் தொடர் யார் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதை அறியும் போர்க்களமாக இருக்கலாம்" என்று ஸ்டெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளேயிங் லெவன்
அதேபோன்று இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராலி, ஜோ ரூட் (இ), டேனியல் லாரன்ஸ்/ஜே லீச், ஜானி பெர்ஸ்டோ, ஓலே போப், ஓலே ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம்பிடிக்கலாம் என்று தெரிகிறது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்கள் மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில், இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும். போதாத குறைக்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும், நியூசிலாந்து அணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய ஆல் ரவுண்டர் ஓலே ராபின்சன் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். இவர் தனது ஆபாச டிவீட்களால் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் மன்னிப்பு கேட்டதால், சிறிய அளவிலான தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.