தோனி
2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி. அதன் பின் அவர் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் கூட ஆடவில்லை. கிரிக்கெட்டை விட்டே ஒதுங்கி இருந்தார்.
மாற்று விக்கெட் கீப்பர்
தோனி இல்லாத நிலையில் இந்திய அணி அவருக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் தொடர்ந்து ஆட வைத்தது. .துவக்கத்தில் நம்பிக்கை அளித்தார் ரிஷப் பண்ட். ஆனால், தோனி அளவுக்கு விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்ற அழுத்தம் ஏற்பட்டது.
பேட்டிங் சொதப்பல்
மறுபுறம் அவரது பேட்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரது இயல்பான ஆட்டத்தையும் ஆட முடியாமல், அணி நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்பவும் ஆட முடியாமல் தவித்தார். எனினும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று வந்தார்.
டெஸ்ட் அணி குழப்பம்
டெஸ்ட் அணியில் இருந்து மட்டும் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு விரிதிமான் சாஹா மீண்டும் இடம் பெற்றார். பின் நியூசிலாந்து தொடரில் பண்ட் சேர்க்கப்பட்டு, சாஹா நீக்கப்பட்டார். டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் குழப்பம் ஒருபுறம் இருக்க அடுத்ததாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வேறொரு மாற்றம் ஏற்பட்டது.
ரிஷப் பண்ட் காயம்
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் செயல்பட்டார். அவர் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் உள்ளவர்.
கேப்டன் கோலி முடிவு
கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்ததை அடுத்து அவரையே அணியின் விக்கெட் கீப்பராக மாற்றும் முடிவில் இருந்தார் கேப்டன் கோலி. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு பின், இலங்கை தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை தொடர்ந்தார்.
காயம் ஏற்படலாம்
ஆனால், சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் கேஎல் ராகுல், விக்கெட் கீப்பராக அதிக நாள் தொடர்ந்தால் அவருக்கு காயம் ஏற்படலாம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து கூறினர். அதனால், அவர் நிரந்தர விக்கெட் கீப்பராக செயல்பட முடியாது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு
இதன் இடையே சஞ்சு சாம்சனுக்கு நீண்ட காலம் கழித்து அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேட்ஸ்மேனாக நிரூபித்தால், விக்கெட் கீப்பராக அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தது. எனினும், தனக்கு கிடைத்த ஒரீரு வாய்ப்புகளிலும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் சாம்சன்.
ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை
தற்போது அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருக்கிறார். அதே சமயம் ரிஷப் பண்ட் மீதும் நம்பிக்கை வைத்து அவரையும் அணியில் தொடர வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். யார் அணியின் விக்கெட் கீப்பர் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.
கடினம் தான்
தோனி விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவது எந்த வீரருக்கும் கடினம் தான். இந்திய அணி தோனி இல்லாமல் தவித்து வருகிறது என்பதே உண்மை. ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.