கோலி படை
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பது இதுவே முதன் முறை. அதில், ஃபைனல் வரை இந்தியா முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜின்க்யா ரஹானே (துணைகேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஐஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல், ரிதிமான் சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால், சஹாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் அணியில் இடம் பெறுவது சந்தேகமே.
கோலி, ரோஹித்
இந்த நிலையில், நாளை (மே.19) புதன்கிழமை முதல், இந்திய அணி வீரர்கள் மும்பையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். மும்பைக்கு வெளியே வசிக்கும் வீரர்களை அழைக்க, பிசிசிஐ சிறப்பு விமானம் தயார் செய்துள்ளது. மும்பையில் வசிக்கும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரஹானே, கோச் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் அடுத்த வாரம், பயோ - பபுளில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று பிரிவுகளாக
மும்பையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் வீரர்கள், ஜூன் 2 அன்று இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று தெரிகிறது. அங்கு சென்ற பின் சவுத்தாம்ப்டனில் மேலும் 10 நாட்களில் பயோ- பபுள் விதிமுறைகள் தொடரும். மொத்தம் 24 நாட்கள் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். மும்பையில், இரண்டு - மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
நெகட்டிவ் ரிசல்ட்
அதேசமயம், மும்பை பயோ - பபுளில் இணைவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மூன்று முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மூன்றிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவர்கள் மும்பைக்கே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும், இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.