சர்ச்சையில் சிக்கினார்
ராகுல் கடந்த ஆண்டின் இறுதியில் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ள இந்தியா ஏ அணியில் இணைந்தார்.
திறமை காட்டினார்
பின்னர் இந்திய அணிக்கு திரும்பி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக திறமையை நிரூபித்தார். இதையடுத்து உலக கோப்பைக்கு அவர் தான் மாற்று தொடக்க வீரர் என்பது உறுதியானது.
வாய்ப்பு கிடைத்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடாத ராகுலுக்கு 4வது போட்டியில் ராயுடுவுக்கு பதில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரிதாக சோபிக்கவில்லை.
மாற்று தொடக்க வீரர்
ராகுல் உலக கோப்பைக்கான மாற்று தொடக்க வீரர் என்று உறுதியாகிவிட்டது. இந் நிலையில், அவருக்கு பதில் ரகானேவை உலக கோப்பைக்கு அழைத்து செல்வது அணிக்கு நல்லது என்று முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறந்த தொடக்க வீரர்
அவர் மேலும் கூறியதாவது:ரகானே இங்கிலாந்து மண்ணில் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார். தொடக்க வீரராக அனுபவம் உள்ள அவர் மிடில் ஆர்டரிலும் ஆடக்கூடியவர்.
மோசமான சொதப்பல்
4ம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். ஆனால், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார்.
மிடில் ஆர்டர் சிக்கல்
முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மிடில் ஆர்டர் சிக்கலும் இன்னும் தீராத நிலையில், ரகானேவை உலக கோப்பை அணியில் எடுப்பதன் மூலம் 2 சிக்கலுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கிடைக்கும்.
ஒதுக்கியது அநீதி
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பீல்டரான ரகானேவை காரணமேயில்லாமல் ஒதுக்கிவைத்திருப்பது அநீதி. மாற்று தொடக்க வீரர் மற்றும் 4ம் வரிசை என இரண்டு பேட்டிங் வரிசைகளிலும் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே ராகுலுக்கு பதிலாக ரகானேவை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என்று வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.