விமர்சனங்கள்
இந்தப் போட்டியிலும் ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்த்து காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு இந்திய அணியால் வழங்கப்படவில்லை. வழக்கம் போல் 4வது வீரராக இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் 16 பந்துகளில் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மீண்டும் ரிஷப் பண்ட் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி
ஃபார்மில் இல்லாத ரிஷப் பண்ட்-ற்கு ஏன் இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது, ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹர்ஷா போக்லே உடனான நேர்காணலிலும், ரிஷப் பன்ட் கோபமாக அளித்த பதில் ரசிகர்களிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு
இன்னும் சில ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், ரிஷப் பண்ட் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்காக, ரிஷப் பண்ட் மீது வெறுப்பை காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று இன்னொரு பக்கம் ரசிகர்கள் பண்ட்-ற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
ரிஷப் பண்ட் சதம்
ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட்-ன் வேலை என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் இதுவரை சரியாக திட்டமிடவில்லை. டெஸ்ட் அணியில் முதன்மை வீரராக செயல்படும் பண்ட்-ற்கு, ஒருநாள் அணியில் வாய்ப்பு என்பது சரியான முடிவு தான். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த சதத்தை அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
தேர்வுக் குழு
தேர்வுக் குழுவினர் செய்த தவறு காரணமாக, இந்திய டெஸ்ட் அணிக்காக மறக்க முடியாத வெற்றிகளையும், சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட் மீது வன்மத்தை கொட்டுவது ஏற்புடையதா என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதும் மறுக்க முடியாத வாதம். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், கேள்வி எழுப்ப வேண்டியது தேர்வு குழுவினரை தானே தவிர, ரிஷப் பண்ட் மீது வன்மத்தை கொட்டுவது சரியாக இருக்காது.