மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் டி20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். 32 டி 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைத்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த உள்ளேன். குறிப்பாக 2021ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கவனம் செலுத்த இருக்கிறேன். அதற்காகவே, டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
ஓடி வந்து, தாவி பிடித்து பந்தை வீசி தெறிக்கவிட்ட இந்திய வீரர்... வைரலாகும் ரன் அவுட் வீடியோ..!!
எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் இந்திய அணிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டி 20 போட்டி விளையாட உள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்றார்.
மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. 3 உலக கோப்பை தொடர்களிலும்(2012ம் ஆண்டு இலங்கை, 2014ல் வங்கதேசம், 2016 இந்தியா) அவர் தலைமையில் இந்திய அணி விளையாடி இருக்கிறது.
இன்னும் சொல்ல போனால், இந்திய மகளிர் டி20 அணியின் முதல் கேப்டன் மிதாலி ராஜ். 88 டி 20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார்.