அசத்தலாக துவக்கிய இந்தியா
2017 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடரில் இந்திய அணி தன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அட்டகாசமாக தொடரை துவங்கியது.
இறுதிப் போட்டி
இங்கிலாந்து அணி அதன் பின் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இந்திய அணி 5 வெற்றிகள், 2 தோல்விகளுடன் லீக் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்து, பின்னர் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
பரபரப்பு
இந்திய அணி அதற்கு முன் உலகக்கோப்பை வென்று இராத நிலையில் தன் முதல் மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா? என்ற பரபரப்பு நிலவியது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி போட்டியை சிறப்பாக துவக்கியது.
இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை கட்டுக்குள் வைத்திருந்தது. ஒரு கட்டத்தில் 63 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி.
இலக்கு
பின்னர் சாரா டெய்லர் 45, சைவர் 51, பிரன்ட் 34 ரன்கள் எடுக்க அந்த அணி 200 ரன்களை கடந்தது. 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏமாற்றம்
இந்திய அணி இந்த இலக்கை எட்டும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். இந்திய அணிக்கு பூனம் ரவுத், ஸ்மிருதி மந்தனா துவக்கம் அளித்தனர். மந்தனா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் மிதாலி ராஜ் 17 மட்டுமே எடுத்தார்.
அணியை மீட்ட ஜோடி
அதன் பின் பூனம் - ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து அணியை மீட்டனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வேதா கிருஷ்ணமூர்த்தி இணைந்து ஆடினார். அப்போது தான் இந்திய அணியை நிலைகுலையச் செய்தார் இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஷ்ரப்சோல்.
ஷ்ரப்சோல் தந்த திருப்புமுனை
43வது ஓவரில் 86 ரன்கள் எடுத்து இருந்த பூனம் விக்கெட்டை சாய்த்தார். அடுத்த ஓவரில் சுஷ்மா வர்மாவை டக் அவுட் ஆக்கினார் ஹார்ட்லி. அடுத்த ஐந்து விக்கெட்களையும் ஷ்ரப்சோல் வரிசையாக வீழ்த்தினார். அதில் ஒன்று ரன் அவுட்.
தீப்தி சர்மா
விக்கெட்கள் ஒருபுறம் சரிய இந்திய அணி கடைசி 2 ஓவர்களில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடியது. தீப்தி சர்மாவை நம்பி இருந்தது இந்திய அணி. அப்போது 49வது ஓவரில் முதல் பந்தில் அவரது விக்கெட்டை சாய்த்தார் ஷ்ரப்சோல்.
தோல்வி
அதே ஓவரில் கடைசி விக்கெட்டையும் சாய்த்தார். இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தன் முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசி சில நிமிடங்கள் மட்டுமே இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. தோல்வி அடைந்தாலும் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த இறுதிப் போட்டி.