மகளிர் டி20 உலகக்கோப்பை
ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து லீக் சுற்றில் வங்கதேச அணியை சந்தித்தது.
ஸ்மிருதி மந்தனா இல்லை
இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும், இந்தியா மிரட்டல் துவக்கம் பெற்றது.
ஷபாலி வர்மா அதிரடி
மற்றொரு இளம் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். டானியா பாட்டியா 2, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ரோட்ரீகஸ் நிதான ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.
ஸ்கோர்
கடைசி 5 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ரன் குவிக்கத் திணறியது இந்திய அணி. தீப்தி சர்மா 11, கோஷ் 14 ரன்கள் எடுத்து வெளியேறினர். வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆட்டம் ஆடி 11 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்தது.
வங்கதேசம் சறுக்கல்
அடுத்து வங்கதேச அணி 143 ரன்கள் என்ற சற்றே சவாலான இலக்கை நோக்கி ஆடியது. அந்த அணிக்கு முர்ஷிதா 30, நிகர் சுல்தானா 35 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். எனினும், மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்து வரிசையாக வெளியேறினர்.
பந்துவீச்சு எப்படி?
இந்திய அணியின் சிக்ஷா பாண்டே (2 விக்கெட்கள், எகானமி 3.5), பூனம் யாதவ் (3 விக்கெட்கள், எகானமி 4.5) மீண்டும் இந்தப் போட்டியிலும் கட்டுக் கோப்பாக பந்து வீசி விக்கெட் வேட்டை ஆடினர். வங்கதேசம் 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா வெற்றி
இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்த நியூசிலாந்து அணியை பிப்ரவரி 27 அன்று சந்திக்கிறது.