2020 மகளிர் உலகக்கோப்பை
2020 மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஷபாலி வர்மா அதிரடி
இந்திய அணிக்கு ஷபாலி வர்மா அதிரடி துவக்கம் அளித்தார். ஸ்மிருதி மந்தனா 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்து வெளியேறினார். ஷபாலி 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.
விக்கெட் சரிவு
தானியா பாட்டியா 23, ரோட்ரிகஸ் 10 எடுத்தனர். பின்னர், மிடில் ஆர்டரில் வேகமாக சரிந்தது. பின் வரிசையில் ஷிகா பாண்டே 10, ரூபா யாதவ் 14 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து ஆட்டம்
அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 34 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அந்த அழுத்தத்துடன் ஆடிய அந்த அணி கடைசி வரை ரன் ரேட்டை எட்டிப் பிடிக்க முடியாமல் திணறியது. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை சென்றது.
கடைசி ஓவர்
கெர் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். அவரை நம்பியே அந்த அணி இருந்தது. கடைசி ஓவரில் 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் நியூசிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
இந்தியா வெற்றி
அப்போது கெர் பந்தை அடிக்க முடியாமல் தடுமாறினார். பின்னர் இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது ஜென்சன் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.