மூன்று போட்டிகள் வெற்றி
2020 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தன் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணியை சந்தித்தது. ஏற்கனவே, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் ஆடியது.
இலங்கை டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனை ஜெயங்கனி 24 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். எனினும், மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
சரிந்த விக்கெட்கள்
இலங்கை அணியில் ஜெயங்கனி 33, மாதவி 12, சிறிவர்தனே 13, தில்ஹரி 25 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராதா யாதவ் விக்கெட் வேட்டை
இந்திய அணியின் ராதா யாதவ் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். தீப்தி சர்மா 1, ஷிகா பாண்டே 1, கெயிக்வாட் 2, பூனம் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஷிகா பாண்டே ஓவருக்கு 8.75 ரன்கள் கொடுத்தது மட்டுமே சிறிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியா அதிரடி
அடுத்து 114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது இந்திய அணி. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா இணைந்து இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் அளித்தனர். ஷபாலி வர்மா 7 ஃபோர், ஒரு சிக்ஸ் விளாசினார்.
ஷபாலி வர்மா மீண்டும் அபாரம்
ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடி 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அவர் 11 வது ஓவரில் ஆட்டமிழந்த போது இந்திய அணி 88 ரன்கள் குவித்து இருந்தது. ஸ்மிருதி மந்தனா 17, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா வெற்றி
ரோட்ரீகஸ், தீப்தி சர்மா கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இருவரும் தலா 15 ரன்கள் எடுத்து இருந்தனர். இந்தியா 14.4 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து
குரூப் ஏ பிரிவில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கும் ஏற்கனவே முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடையே அரையிறுதிக்கு செல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, வங்கதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.