தவிர்க்க முடியாத காயங்கள்...
இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி சர்வதேச அளவில் காயம் காரணமாக வீரர்கள் அணியிலிருந்து விலகுவது அதிகமாக காணப்படுகிறது. ஆட்டத்தில் தவிர்க்க முடியாததாக இருக்கும் அந்த காயங்கள் காரணமாக அதிவேகமாக இருக்கும் அவர்களது வாழ்க்கை ஓட்டம், தடைபட்டு அந்தக் காயம் மட்டுமின்றி, அந்த ஓய்வுமே அவர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடுகிறது.
ரசிகர்களின் கேலிக்கு ஆளான ரிஷப்
உடல் காயம் இல்லாமல் மனதில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இராணுவ செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இதையடுத்து அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரிஷப் பந்த், தன்னுடைய சொந்த திறமையை காட்ட மறந்து, தோனி போலாக வேண்டும் என்ற நெருக்கடியில் எதையும் சரியாக செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இதனால் மைதானங்களில் அவர் செய்யும் தவறுகளுக்கு தோனியின் பெயரை கொண்டு அவரை ரசிகர்கள் கேலி செய்யும் சூழல் காணப்படுகிறது.
கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு
கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி சார்பில் ரிஷப் பந்த்திற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் அவரால் தன்னுடைய திறமையை உடனடியாக நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்துவரும் முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அவருக்கு போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 21 வயதே ஆன ரிஷப் பந்த், உடனடியாக தோனியின் இடத்தை நிரப்ப முடியாது என்றும் கூறி வருகின்றனர்.
கையில் காயம்பட்ட விராட் கோலி
பயிற்சி ஆட்டத்தின்போதோ அல்லது உள்ளூர் மற்றும் சர்வதேச ஆட்டங்களின் போதோ வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் அணியின் சர்வதேச போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த உலக கோப்பையில் கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் போன்ற வீரர்கள் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உலக கோப்பையில் முறையான ஆட்டங்களை தர தவறினர். உலக கோப்பையை இந்திய அணி மிஸ் செய்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது.
மேற்கிந்திய தீவிற்கு எதிராக மயங்க் களம்
விளையாட்டு வீரர்களின் பயணம் என்பது சாலைகளில் வாகனங்களில் செய்யப்படும் பயணம் போன்று பாதுகாப்பு இல்லாதது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், டெல்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக களமிறங்கினார். அப்போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. அவரது பேட்டிலிருந்து சிதறிய துண்டு ஒன்று பதம்பார்த்ததால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவுள்ளார். டெஸ்ட்டுகளில் சிறந்து விளங்கிவரும் மயங்க், தன்னுடைய திறமையை ஒருநாள் போட்டிகளில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு
இந்திய அணியில் மிக சிறப்பான 4வது இடத்தில் யாரை இறக்குவது என்பது குறித்து பல்வேறு அபிப்பிராய பேதங்கள் நிலவிவந்த நிலையில், அந்த இடத்திற்க விஜய் சங்கர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று தலைமை தேர்வாளர் பிரசாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், காயம் காரணமாக விஜய சங்கரும் அந்த இடத்தை நிரப்பவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த கோலி, யாரையும் எந்த இடத்திலும் நிரப்ப முடியாது, விளையாட்டின் போக்கே அதை தீர்மானிக்கும் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த 4வது இடத்திற்கு களமிறக்கப்படுகிறார்.
ஷர்துல் தாக்குல் இடம்பிடிப்பு
இதேபோல இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு விளையாட்டு வீரர்களுக்கு வரும் குடலிறக்கப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குல் அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஷர்துல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள போதிலும், உடனடியாக அவரை புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக நினைப்பது சிறப்பாக இருக்காது என்பதே வல்லுநர்களின் கருத்து.
நெருக்கடியில் தேர்வுக்குழு
புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தங்களது திறமைகளை நிரூபிப்பது என்பது அணிக்கு மிகவும் அவசியம்தான். ஆனால் காயம் காரணமாக மூத்த மற்றும் நடுத்தர வீரர்கள் விலகும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக கால அவகாசம்கூட இன்றி உடனடியாக மாற்று வீரரை அதிலும் இளம் வீரரை களமிறக்குவது அணிக்கு பின்னடைவையே தரும்.
சிறந்த வீரர்களையே நாடும் ரசிகர்கள்
விக்கெட் கீப்பிங்கில் மற்றும் பேட்டிங்கிலும் கலக்கிய முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது இருப்பின்மையை ரசிகர்கள் உடனடியாக ஏற்பதில்லை. அதே திறமையுடன் உடனடியாக மாற்று வீரரை களமிறக்குவதில் உள்ள சிக்கல் காரணமாக ரசிகர்கள் அதிருப்தி அடைகின்றனர்.
ரெடியாக இருந்தால் நோ பிராப்ளம்
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமாக உள்ளது போலவே வீரர்களும் ஏராளமாக உள்ளனர். அவர்களை சரிவர அடையாளம் கண்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குழுவை அமைத்து, முறையான பயிற்சி அளிக்க பிசிசிஐ முடிவெடுக்க வேண்டும். அதை உடனடியாக செயல்படுத்தவும் வேண்டும். இவ்வாறு இருந்தால், தேசிய அணியில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்படும்போது, திறமையான மாற்று வீரரை உடனடியாக களமிறக்கலாம். அதில் சாதக பாதகங்கள் இருந்தாலும், ரசிகர்கள் ஏற்கும் திறமையுடன்கூடிய வீரரை தேர்வு செய்ய தேர்வு வாரியத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்.