3வது டி20 போட்டி
இப்போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்-ம் வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கும் முதுகுவலி பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.
ரோகித்தின் விளக்கம்
டாஸின் போது, இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு சிறியதாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். ஆனால் இதில் தான் சந்தேகம் எழுந்துள்ளது.
பும்ராவின் நிலை
இந்தியாவின் முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ராவுக்கும் முதலில் முதுகு வலி பிரச்சினை என்று தான் கூறப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓய்வில் இருப்பதாகவும் தான் கூறினர். ஆனால் அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அர்ஷ்தீப் சிங்கிற்கும் அதே நிலைமை வந்துள்ளது.
ரசிகர்களுக்கு கவலை
ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயத்தில் இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அர்ஷ்தீப் சிங் மட்டும் தான். புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக தான் தீபக் சஹார் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த சூழலில் தான் அர்ஷ்தீப் சிங் குறித்தும் கவலை எழுந்துள்ளது.