பேட்டிங் பயிற்சியாளர்
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் இருந்தபோது பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார் கிராண்ட் பிளவர். அப்போது பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு டூர் போயிருந்தது. அந்த சமயத்தில் யூனிஸ் கானுக்கு சில பேட்டிங் டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார் பிளவர். அதை யூனிஸ் கான் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், மிக்கி ஆர்தர் தலையிட்டு தடுத்ததாகவும் கூறியுள்ளார் பிளவர்.
பரபரப்பும் சர்ச்சையும்
இது பெரும் பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான்தான் அப்போது தலைமைப் பயிற்சியாளராக இருந்தேன். எனக்குத் தெரிந்து அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. எனக்கு யாரும் அதுகுறித்து சொல்லவும் இல்லை. எனக்கு நினைவு தெரிந்து எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை என்றார் இன்சமாம் உல் ஹக்.
இன்சமாம் ஆச்சரியம்
மேலும் அவர் கூறுகையில், கிராண்ட் பிளவர் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. நான் யூனிஸுடன் நிறைய போட்டிகளில் ஆடியுள்ளேன். அவரை எனக்கு நன்றாக தெரியும். அவர் அப்படி செய்வார் என்று நான் கருதவில்லை என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக யூனிஸ் கானும், கிராண்ட் பிளவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். அவர்களுக்கு இடையே இருந்த பூசல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நடந்தது என்னவோ
தற்போது யூனிஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இங்கிலாந்து போயுள்ள பாகிஸ்தான் அணியுடன் அவரும் இணைந்துள்ளார். அதேசமயம், கிராண்ட் பிளவர் தற்போது கொழும்பில் இருக்கிறார். இந்த விவகாரம் உண்மையா என்ன என்பது குறித்து யாருக்கும் சரியாக தெரியவில்லை என்பதே இப்போதைக்கு புரிய வருகிறது.