ரசிகர்கள் கொண்டாட்டம்
கடந்த 2010ம் ஆண்டில் பிப்ரவரி 24ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக குவாலியரில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில் 147 பந்துகளில் தன்னுடைய இரட்டை சதத்தை சச்சின் டெண்டுல்கர் அடித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் இந்த சாதனையை புரிந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளானார்.
சர்வதேச வீரர்கள் பாராட்டு
சச்சினின் இந்த சாதனையை பாராட்டி பிசிசிஐ வீடியோ வெளியிட்டிருந்தது. மேலும் சர்வதேச அளவில் வீரர்கள், ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை சமூகவலைதளங்கள் மூலம் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-அல்-ஹக்கும் சச்சினை பாராட்டி யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் -சச்சின் ஒட்டிப்பிறந்தவர்கள்
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் என்று பாராட்டு தெரிவித்துள்ள இன்சமாம், அவரும் கிரிக்கெட்டும் ஒட்டிப் பிறந்தவர்கள் என்று தான் எப்போதும் கருதுவதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பேட்டிங்கால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்த சச்சின், எதிரணி பௌலர்களுக்கு எப்போதும் நெருக்கடியை அளித்ததாகவும் இன்சமாம் தெரிவித்துள்ளார்.
16 வயதில் ஆரம்பித்த பயணம்
தன்னுடைய 16 வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர், தொடர்ந்து தான் ஆடிய 24 ஆண்டுகாலமும் பல சாதனைகளை புரிந்துள்ளதை சுட்டிக்காட்டிய இன்சமாம், நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப் போனவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அசாதாரண திறமைக்கு சான்று கூறவேண்டுமென்றால் சச்சின் டெண்டுல்கரையே கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஓவரில் 4 சிக்ஸ்கள்
பாகிஸ்தானுடன் கடந்த 1989ல் தனது முதல் போட்டியை ஆடிய சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய மிகவும் சிறிய வயதிலேயே முன்னணி பௌலர்கள் வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், இம்ரான் கான் போன்றவர்களை திணறடித்தார் என்றும் இன்சமாம் கூறியுள்ளார். அந்தப் போட்டியில் அப்துல் காதிர் போட்ட ஒரே ஓவரில் சச்சின் அடித்த 4 சிக்ஸ்கள், பாகிஸ்தான் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்சமாம் பெருமிதம்
சச்சின் டெண்டுல்கர் ஆடிய காலகட்டத்தில் தானும் கிரிக்கெட்டில் இருந்தது தனக்கு பெருமை அளிப்பதாகவும், பெரும்பாலும் 8,000 -8,500 ரன்களில் தங்களது கேரியரை முடித்துக்கொள்ள கிரிக்கெட் வீரர்கள் விரும்பும் நிலையில், 10,000 ரன்களுக்கு மேல் அடித்து சச்சின் சாதனை புரிந்துள்ளதாகவும் இன்சமாம் புகழாரம் சூட்டினார். அவரது காலகட்டத்தில் சுனில் கவாஸ்கர் மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தொடர்ந்து விளையாட வைப்பேன்"
பேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், தன்னை பலமுறை அவுட் ஆக்கியுள்ளதாக இன்சமாம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் அதிகாரம் இருந்தால், சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து ஆட வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது ஆட்டம் எப்போதும் உற்சாகத்தை தரக்கூடியது என்று தெரிவித்துள்ள இன்சமாம், கிரிக்கெட்டிலிருந்து அவர் எப்போதும் வெளியேறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.