முதல் டெஸ்ட் போட்டி
2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. முதல் போட்டி லாகூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வக்கார் யூனிஸ் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இன்சமாம் முச்சதம்
இம்ரான் நசிர் சதம் அடித்தார். மறுபுறம் இன்சமாம் உல் ஹக் முச்சதம் கடந்து 329 ரன்கள் குவித்தார். அதுதான் அவரது அதிகபட்ச ரன் ஆகும். அந்த சாதனை செய்ததோடு நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற இருந்தது. அந்த போட்டி துவங்கும் முன் அந்த நகரில் வீரர்கள் தங்கி இருந்த அறை அருகே குண்டு வெடிப்பு நடந்தது. அதனால், அந்த தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
குண்டு வெடிப்பு
அது குறித்து தற்போது தன் யூட்யூப் சேனலில் கூறினார் இன்சமாம் உல் ஹக். 2002ஆம் ஆண்டு கராச்சியில் பேருந்தில் குண்டு வெடித்தது. அந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகே நடந்தது. இன்சமாம் வீரர்கள் எப்படி தப்பினர் என்பது பற்றி கூறினார்.
தப்பித்த வீரர்கள்
வீரர்கள் அப்போது போட்டிக்கு தயாராகி மைதானம் செல்ல பேருந்துக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்சமாம் இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. ஆனால், தான் பேருந்துக்கு சென்றதால் தப்பியதாக கூறினார் இன்சமாம்.
இன்சாமம் ஓட்டம்
தான் பேருந்து ஏறும் முன் உணவு உண்ண சென்றதாகவும், அப்போது பெரிய சத்தம் கேட்டதாகவும், தான் அருகே இருந்த காவலரிடம் என்ன நடந்தது என கேட்டு குண்டு வெடிப்பு பற்றி தெரிந்து கொண்டதாக கூறினார். பின்னர் கீழ் தளத்துக்கு தப்பி ஓடுமாறு கூறி உள்ளனர்.
நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர்
அதை அடுத்து இன்சமாம் கீழ் தளத்துக்கு வேகமாக சென்றுள்ளார். அப்போது அங்கே நியூசிலாந்து வீரர்கள் நீச்சல் குளத்தில் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். நியூசிலாந்து வீரர்கள் அதுவரை அப்படி ஒரு சம்பவத்தை அவர்கள் நாட்டில் கேள்விப்படாத நிலையில், அன்று அவ்வாறு இருந்ததாக கூறினார் இன்சமாம்.
பாகிஸ்தான் நிலை
அதன் பின் 2009இல் அதே பாகிஸ்தான் நாட்டில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பின்னர் பாகிஸ்தான் நாட்டிற்கு பல ஆண்டுகளுக்கு எந்த நாடும் கிரிக்கெட் ஆட செல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.