ஐ.பி.எல். போட்டியில் இன்று, 2 போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி, பெரோசா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ், வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்கிடம் 1 ரன்னில் தோற்ற டெல்லி அணி சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி, கேப்டன் டுமினி, யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்பினர். இதனால் அவர்கள் சிறப்பாக ஆடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்பி மார்கல், நாதன் கோல்ட்டர் நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜஸ்தான் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் 2வது போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது. கடந்த போட்டியில் காயம் காரணமாக, விளையாடாத கேப்டன் வாட்சன் இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்தன. இதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் காத்திருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும், பஞ்சாப் அணி ராஜஸ்தானிடமும் தோற்று இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.