அடுத்தடுத்து அவுட்
2-வது ஓவரில் வெய்ன் ஸ்மித் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த ஓவரில் மற்றொரு முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, கிறிஸ் மொரிஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். 15 ரன்களுக்குள் சென்னை அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளானது.
மீட்ட மெக்கல்லம்- டுபிளிஸ்சிஸ் ஜோடி
விக்கெட் சரிவை பொருட்படுத்தாமல் தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பிரவின் தாம்பே வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட பிரன்டன் மெக்கல்லம், பவுல்க்னெர் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசினார்.
சென்னை அணி 14.2 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் கண்ட டுபிளிஸ்சிஸ் தன் பங்குக்கு 25 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஷேன் வாட்சனால் ரன்-அவுட் செய்யப்பட்டார். 3-வது விக்கெட்டுக்கு பிரன்டன் மெக்கல்லம்-டுபிளிஸ்சில் ஜோடி 101 ரன்கள் சேர்த்தது.
மெக்கல்லம் 81 ரன்கள்..
நிலைத்து நின்று ஆடிய மெக்கல்லம் கிறிஸ் மொரிஸ் பந்து வீச்சை அடித்து ஆட முயல அது பவுண்டரி எல்லையில் நின்ற அங்கித் சர்மா கையில் தஞ்சம் அடைந்தது. பிரன்டன் மெக்கல்லம் 61 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட பவான் நெகி 2 ரன்னில் அவுட் ஆனார்.
சென்னை அணி 157/5
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் டோணி 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்னும், வெய்ன் பிராவோ 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும், அங்கித் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
12 ரன்களில் வெற்றி
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது.
ஜடேஜா 4 விக்கெட்டுகள்..
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியிம் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..
இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது சென்னை அணி.
முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் கண்ட தோல்விக்கு சென்னை அணி நேற்று பழிதீர்த்ததுடன், உள்ளூரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.