மும்பை: நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இறுதிப்போட்டிக்கான முந்தைய சுற்றின் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 65 ரன்கள், படேல் 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இறுதியாக விளையாடிய அதிரடி பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் என சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.சென்னை அணி வெல்ல 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
பின்னர் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் ஹஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஸ்மித் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
இருப்பினும் ஹஸ்ஸியும் டூபிளெசிஸ்ஸும் சற்று நிலைத்து நின்றனர். 5.1வது ஓவரில் ஹஸ்ஸி 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். ரெய்னா தம் பங்குக்கு 25 ரன்களை எடுத்தார்.
சென்னை அணியின் கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பினார். டூபிளெசிஸ்தான் நிலைத்து அதிகபட்சமாக் 45 ரன்களை எடுத்தார்.
பின் வரிசை வீரர்களில் பிராவோ 20, ஜடேஜா 19, அஸ்வின் 24 ரன்கள் மட்டுமே நடையைக் கட்டினர். சென்னை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களையே எடுக்க முடிந்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.