ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு சூதாட்ட புக்கிகள் தூதுவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவந்த ஸ்ரீசாந்த், 2013ம் ஆண்டு சீசனின்போது, சூதாட்ட புகாரில் சிக்கினார். அவர் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.
இந்நிலையில், தற்போது ராஜஸ்தானுக்காக ஆடிவரும், மும்பையை சேர்ந்த ஒரு வீரரை சூதாட்ட புக்கிகள் அணுகியுள்ளனர். ரஞ்சி தொடரில், உடன் ஆடிய ஒரு வீரர் மூலமாக, புக்கிகள், இந்த ராஜஸ்தான் வீரருக்கு தூது விட்டுள்ளனர்.
அந்த ரஞ்சி வீரர் ஐபிஎல்லுக்காக ஆடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரஞ்சி போட்டியின்போது ஏற்பட்ட தோழமையை பயன்டுத்தி, புக்கிகளுக்காக, ராஜஸ்தான் வீரரிடம் பரிந்து பேசியுள்ளார்.
இந்த தகவல் இந்தியாவிலுள்ள ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றால் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், வீரர்களின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கி மூன்று நாட்கள்தான் ஆகியுள்ள நிலையில், சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.