டெல்லி: ரூ.14 கோடி கொடுத்து வாங்கிய யுவராஜ் சிங்கை அடுத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து கழற்றிவிட்டுள்ளது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கோடை காலத்தில் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி வீரர்களின் தேர்வுக்காக ஏலம் விடப்படும். இதையொட்டி, ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களின் பட்டியலை அளிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கழற்றிவிடப்படும் வீரர்களை பிற அணிகள் வாங்கிக்கொள்ளும் வகையில் ஏலத்தில் அவர்கள் பெயரை சேர்க்க ஐபிஎல் நிர்வாகம் இந்த பட்டியலை கேட்பது வழக்கம்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவின், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ரூ.14 கோடி கொடுத்து வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கை அடுத்த ஐபிஎல்லில் கழற்றிவிட மல்லையா திட்டமிட்டுள்ளார் என்பதுதான் இதில் முக்கியமான தகவலாகும்.
14 கோடி கொடுத்து யுவராஜ்சிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியபோதே பலரது புருவத்தையும் அது உயர்த்தியது. ஆனால் கொடுத்த படத்துக்கு தக்கபடி யுவராஜ் ஆடவில்லை என்பதால் அணி நிர்வாகம் அதிருப்தியடைந்துள்ளது. 2014 ஐபிஎல்லில் கடைசியில் இருந்து 2வது இடத்திற்குதான் பெங்களூர் அணியால் வர முடிந்தது. 5 வெற்றிகளை பெற்ற அந்த அணி 9 முறை தோற்று ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியது.
பெங்களூர் அணியில் கிறிஸ்கெய்ல், விராட் கோஹ்லி, ஏபிடி வில்லியர்ஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால் கூடுதலாக யுவராஜை வைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள அணி நிர்வாகம் யுவராஜை கழற்றிவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் யுவராஜ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், சுழல்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் பைனல் வருகையாளர்களான கிங்ஸ் லெவன் பஞ்சாப் தனது அணியில் இருந்து பேட்ஸ்மேன் புஜாரா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி, சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் ஆகியோரை நீக்க முடிவு செய்துள்ளது.