ராஜ்கோட்: மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், ஒட்டு மொத்த டி20 தொடரில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் 3 ரன்கள் எடுத்த போது கெயில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20 லீக் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் 'டாஸ்' வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா, முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, துவக்க வீரர் கிறிஸ் கெயில், 3 ரன்கள் எட்டிய போது, ஒட்டு மொத்த டி-20 அரங்கில் 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இன்றைய போட்டியில் 38 பந்தில் 77 ரன்களை குவித்தார் கெயில்.
2005 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான கெயில், 289 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கிறிஸ் கெய்ல் 2013ல் 175 ரன்கள் விளாசியதுதான் இதுவரை தனி நபரின் ஐபிஎல் உச்சபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்தின்போது 13 பவுண்டரிகளும் 17 சிக்சர்களும் விளாசினார். 66 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
ஒரே போட்டியில் அதிகப்படியான சிக்சர் விளாசியவர் என்ற பெருமையும் கிறிஸ் கெயிலுக்கு உள்ளது. அவர் 175 ரன்கள் விளாசிய போட்டியில் அடித்து துவைத்த 17 சிக்சர்களை இதுவரை யாரும் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.