கேப்டன் யார்?
ஐந்து போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டார். ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ரஹானேவை விட்டால் அனுபவமும், தலைமைப் பண்பும் கொண்ட வீரர்கள் யாரும் இல்லை. அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியிராத சஞ்சு சாம்சன் மட்டுமே உள்ளார்.
மீண்டும் கேப்டன்
எனவே, வேறு வழியின்றி ரஹானேவை மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம். ஸ்டீவ் ஸ்மித் மே மாதம் ஆஸ்திரேலியா சென்று விடுவார் என்று தெரிந்தே அவரை ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமித்தது. ஆனால், அந்த மாற்றம் நிச்சயம் அணிக்கு உதவியுள்ளது என்றே சொல்லலாம்.
ஸ்மித் தந்த வெற்றிகள்
எப்படி என்றால், ரஹானே கேப்டனாக இருந்த எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றது ராஜஸ்தான் அணி. ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றிகள் கிடைத்தது ஒருபுறம் என்பதோடு, ரஹானே பார்முக்கு திரும்பினார்.
பார்முக்கு திரும்பிய ரஹானே
ரஹானே கேப்டனாக இருந்த போது, அதிரடியாக ரன் குவிக்கவில்லை. சராசரியாக 20-25 ரன்கள் எடுத்து வந்தார். அது அணிக்கு உதவவில்லை. ஆனால், கேப்டன் பதவியை பறித்தவுடன் வந்த உத்வேகத்தில் உச்சகட்ட பார்முக்கு திரும்பி சதம் அடித்தார்.
பிளே-ஆஃப் நிலை
தற்போது, ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால், ரஹானே தலைமையில் தன் கடைசி லீக் போட்டியில் வெல்ல வேண்டும். ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மூன்றும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுக்கக்கூடாது. இது இரண்டும் நடக்க வேண்டும்.