சிறந்த வீரர்கள் இருந்தும்..
கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இருந்தும் அந்த அணி தொடர்ந்து அதிக தோல்விகளை சந்தித்து வருகிறது.
அணித் தேர்வு
இதற்கு மோசமான அணித் தேர்வு தான் காரணம் என கூறுகிறார் அனில் கும்ப்ளே. பெங்களூர் அணி பல போட்டிகளில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது. ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால், பெங்களூர் அணி அதை உபயோகப்படுத்தவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் கும்ப்ளே.
உமேஷ் யாதவ் பார்ம்
பெங்களூர் அணியில் வேகப் பந்துவீச்சில் முக்கிய வீரராக இருந்த உமேஷ் யாதவ் முற்றிலும் பார்ம் அவுட். இது தெரிந்தும், போட்டிக்கு, போட்டி அவரிடம் பந்தை கொடுத்தார் கோலி. அதையும் சுட்டிக் காட்டினார் கும்ப்ளே.
உலகக்கோப்பை
அடுத்து, முதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்த பின், பெங்களூர் அணி சில வெற்றிகளை பெற்று வந்தது. அப்போது, மொயீன் அலி, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டி தங்கள் நாட்டுக்கு திரும்பினர். அது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இளம் வீரர்கள் சொதப்பல்
ஷிம்ரான் ஹெட்மயர், ஷிவம் துபே, அக்ஷ்தீப் நாத் உள்ளிட்ட இளம் வீரர்களை இந்த ஆண்டு புதிதாக தேர்வு செய்தது பெங்களூர். இவர்கள் யாரும் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் அனில் கும்ப்ளே.
வீரர்கள் தேர்வு
ஆக, பெங்களூர் அணி வீரர்கள் தேர்வில் தான் பெரிய அளவில் கோட்டை விட்டுள்ளது என்கிறார். பார்ம் அவுட் வீரர்கள், உலகக்கோப்பைக்கு தயாராக பாதியில் கிளம்பும் வீரர்களை அணியில் தேர்வு செய்ததே அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்கிறார். கேப்டனாக விராட் கோலி, இதையெல்லாம் சரி செய்யவில்லை என்பதே இதில் முக்கிய விஷயம்.