|
பாக். கிரிக்கெட் லீக் சர்ச்சை
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரை தயாரித்து, ஒளிபரப்பி வந்த இந்திய நிறுவனம் பாதியிலேயே அதை நிறுத்திக் கொண்டது.
பழி வாங்கும் நேரம்
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரின் இந்திய ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் சிக்கலில் ஆழ்ந்தது. அதில் இருந்து மீண்டு வந்தாலும், பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்த பாகிஸ்தான் அரசாங்கம், ஐபிஎல் தொடரை தன் நாட்டில் தடை செய்து உத்தரவிட்டது.
ஐபிஎல் தேவையில்லை
இந்த தடையை ஒட்டி பாகிஸ்தானியர்கள் பலர் இணையத்தில் தங்களுக்கு ஐபிஎல் தேவையில்லை, நாடு தான் முக்கியம் என கூறி வந்தனர். சரி, பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்பப்படா விட்டால் சிறிய இழப்பு ஏற்படும், இந்திய நிறுவனங்கள் செய்ததும் தார்மீக ரீதியாக தவறு என்பதால், இந்தியாவில் யாரும் இதை பெரிதாக எதிர்க்கவில்லை.
ஆனால், நாங்கள் ஐபிஎல் பார்க்கமாட்டோம் என கூறி வந்த பாகிஸ்தானின் இணையவாசிகள் தான் இப்போது நகைப்பை உண்டாக்கி இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கியது முதல் ட்விட்டரில் பாகிஸ்தான் ட்ரென்டிங்கில் ஐபிஎல் போட்டிகள் இடம் பெற்று வருகிறது.
அஸ்வின் - பட்லர் சர்ச்சை
ஒவ்வொரு போட்டியும் இடம் பெற்று வந்தது ஒருபுறம் இருக்க அஸ்வின் - பட்லர் ரன் அவுட் சர்ச்சை முதல் இடத்தில் ட்ரென்டிங்கில் இருந்தது. தொடர்ந்து 3 நாட்களாக முதல் பத்து இடங்களில் அஸ்வின் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறார்.
நேரலையில் ஐபிஎல்
குறிப்பிட்ட சிலர் ஐபிஎல்-லை திட்டி கருத்துக்கள் போட்டு வந்தாலும், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை தடையை மீறி பார்த்து வருகிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் நேரலையில் போட்டியை பார்க்காவிட்டால், பாகிஸ்தான் ட்ரென்டிங்கில் ஐபிஎல் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை.