இரு வீரர்கள் விலகல்
ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மற்றொரு வீரரும் விலகவே, சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி முழுமையற்றதாக மாறி உள்ளது.
பிராவோ, வாட்சன் கூட்டணி
கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணி சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிரமப்பட்டது. ஆல்-ரவுண்டர்கள் பிராவோ, வாட்சன் தான் அந்தக் குறையை ஈடுகட்டி வந்தனர்.
லுங்கி நிகிடி நம்பிக்கை
கடந்த சீசனின் அறிமுக வீரரான லுங்கி நிகிடி சில போட்டிகளில் பங்கேற்று, ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். அவர் இந்த ஆண்டும் கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் காயம் காரணமாக ஆடவில்லை.
டேவிட் வில்லி விலகல்
சரி, டேவிட் வில்லி இங்கிலாந்தில் இருந்து வந்த பின் அவரை வைத்து பாதி போட்டிகளில் சமாளிக்கலாம் என்ற திட்டம் இருந்தது. அவர், தன் மனைவி இரண்டாவது குழந்தையை பெற்றடுக்க உள்ளதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வாய்ப்புக்கள்
தற்போது சென்னை அணிக்கு இருக்கும் வேகப் பந்துவீச்சு வாய்ப்புக்கள் - மோஹித் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஷேன் வாட்சன் (ஆல் ரவுண்டர்), பிராவோ (ஆல்-ரவுண்டர், மிதவேகப் பந்துவீச்சு)
இவர்கள் தான் வழி
இவர்களில் மோஹித் சர்மா இதுவரை களமிறங்கவில்லை. தீபக் சாஹர் இரண்டு போட்டிகளில் ஆடி, ஓரளவு நம்பிக்கை அளித்துள்ளார். ஷர்துல் தாக்குர் ரன்களை வாரி வழங்குகிறார். இவர்களை நம்பியே சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு அமைந்துள்ளது.
தோனி திட்டம்
தோனி இதை எல்லாம் முன்கூட்டியே கணித்தாரோ, என்னமோ? முதல் போட்டியில் இருந்தே மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்கி வருகிறார். ஒருவேளை இந்த தொடர் முடியும் வரை சுழற் பந்துவீச்சாளர்களை வைத்தே தோனி ஓட்டி விடுவார் என்பதே பேச்சாக இருக்கிறது.