சென்னை - டெல்லி
தகுதி நீக்கப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து வெளியேற, டெல்லி அணி வெற்றி பெற்று இரண்டாம் தகுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சென்னை அணியை சந்திக்க உள்ளது டெல்லி.
வெற்றிக் கணக்கு
சென்னை ரசிகர்கள் எப்படியாவது இந்த முறையும் சிஎஸ்கே ஐபிஎல் தொடரை வென்று விடவேண்டும் என எண்ணி, பல கணக்குகளை போட்டு எப்படியும் ஜெயித்துவிடலாம் என கூறி வருகிறார்கள்.
இரு முறை வெற்றி
இப்போதைக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டியது முக்கியம். அதற்கு டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். ஏற்கனவே, லீக் சுற்றில் டெல்லி அணியை, சென்னை இரு முறை வீழ்த்தி உள்ளது.
சுழற் பந்துவீச்சு
அந்த இரண்டு முறையும் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் (டெல்லி, சென்னை) பேட்டிங் செய்ய மந்தமாக இருந்தது. சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைத்தது. இரண்டாம் தகுதிப் போட்டி நடைபெற உள்ள விசாகப்பட்டினம் மைதானமும், சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பதாகவே தெரிகிறது.
சிக்கனம்
அந்த மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி நீக்கப் போட்டியில், ஹைதராபாத் - டெல்லி இரு அணிகளை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர்களும் சிக்கனமாகவே ரன் கொடுத்தனர். ஆனால், சுழற் பந்துவீச்சில் அதிக விக்கெட்கள் விழவில்லை. ரஷித் கான் மட்டுமே 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சிஎஸ்கே வெற்றி
சென்னை அணியின் பலமே சுழற் பந்துவீச்சு தான். எனவே, சென்னை அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கினால், எப்படியும் ரன்களைக் கட்டுப்படுத்தி, டெல்லி அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற்று விடும் என கணக்கு போட்டு உள்ளனர் சில சென்னை ரசிகர்கள்.
இறுதிப் போட்டி
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு சென்னை முன்னேறும். அங்கே மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.