ரசிகர்கள் கணக்கு
கூட்டிக்.. கழிச்சு.. கணக்கு போட்டு, "எப்படியும் சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு போயிடும்" என ஒரு ரசிகர் கூட்டம் கூறி வருகிறது. அவர்களின் அடுத்த சுவாரசிய கண்டுபிடிப்பு இதுதான் -
தகுதிச் சுற்று போட்டி
2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதே இரண்டாம் தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. அதே போல, இந்த முறையும் டெல்லி அணியை இரண்டாம் தகுதிப் போட்டியில் வீழ்த்தி சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
என்னதான் நடந்தது?
எப்படித்தான் இவர்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதோ? எனினும், 2௦12இல் அப்படி என்னதான் நடந்தது என பார்த்தோம். அந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 58 பந்துகளில் 113 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார்.
படுதோல்வி
அடுத்து ஆடிய டெல்லி அணியில் ஜெயவர்தனே 55 ரன்கள் சேர்த்தார். அவர் தவிர்த்து எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. டெல்லி 136 ரன்கள் மட்டுமே சேர்த்து 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
பேட்டிங் வரிசை
குறிப்பாக, அப்போதைய டெல்லி அணியில் ஆடிய ஒரு வீரர் கூட இப்போது இருக்கும் டெல்லி அணியில் இல்லை. அதே சமயம், அவர்களின் பேட்டிங் வரிசை மிரட்டும் வகையில் இருந்தது. அப்படி யார் இருந்தார்கள்?
ஐந்து பேட்ஸ்மேன்கள்
ஜெயவர்தனே, டேவிட் வார்னர், வீரேந்தர் சேவாக், ராஸ் டெய்லர் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல். இப்படி ஐந்து முத்தான பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது டெல்லி.
நடக்குமா?
அந்தப் போட்டியில் சென்னை அணியில் ஆடிய ஐந்து வீரர்கள் - முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் இப்போதும் அதே அணியில் ஆடி வருகின்றனர். அதே பழைய சென்னை அணி, டெல்லி அணியை பழைய மாதிரி ஆடி புதுப் பொலிவுடன் இருக்கும் தற்போதைய டெல்லி அணியை வீழ்த்துமா?