முதுகுப் பிடிப்பு
2019 ஐபிஎல் தொடரில் தோனி இரண்டாவது முறையாக ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. முதலில் முதுகுப் பிடிப்பு காரணமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்று ஆடினார்.
இருவருக்கும் காய்ச்சல்
எல்லாம் சரியாக சென்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி, ஜடேஜா இருவரும் பங்கேற்கவில்லை. இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அடுத்த போட்டிகளில் இவர்கள் இருவரும் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது.
வைரஸ்.. பாக்டீரியா!!
இந்த நிலையில், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், "அவர்கள் இருவரும் மிக மோசமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். வைரஸ்.. பாக்டீரியா.. பல அணிகளும் இது போல பாதிக்கப்பட்டுள்ளன" என கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.
கவலையில் ரசிகர்கள்
சாதாரண காய்ச்சல் என எண்ணிக் கொண்டு இருந்த தோனி ரசிகர்கள்.. பிளெம்மிங் கூறிய "வைரஸ்.. பாக்டீரியா.." என்ற வார்த்தைகளை கேட்டு அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குணமாக எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற சந்தேகமும் உள்ளது.
தோனி நிச்சயம் வேண்டும்
தோனி இல்லாமல் ஆடிய சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே, அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் தோனி நிச்சயம் திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே.
பிளே-ஆஃப்
ஐபிஎல் தொடரில் சென்னை அணி எப்படியும் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும் என்றாலும், அதற்குள் தோனி, ஜடேஜா இருவரும் உடல்நிலை சீராகி அணிக்கு திரும்ப வேண்டும். இது ஐபிஎல் தொடர் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல.
உலகக்கோப்பை தொடர்
ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இரு வாரங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் துவங்க உள்ளது. அந்த தொடரில் மூத்த வீரர் தோனி முக்கிய பங்காற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில் இந்த கெட்ட செய்தி வந்து சேர்ந்துள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கவலையில் இருக்கின்றனர்.