பிளே-ஆஃப் உறுதி
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகளுக்குப் பின் அடுத்து பிளே-ஆஃப் சுற்று துவங்க உள்ளது.
மோசமாக மாறினால்…
இந்த நிலையில் தோனி, இப்போது (முதுகு) வலி மோசமாக இல்லை என்பதால், அதனுடன் ஆடி வருகிறேன். இப்போதைக்கு பெரிய பிரச்சனையாக இல்லாத தன் காயம், மோசமாக மாறினால், ஐபிஎல் தொடருக்கு சற்றே ஓய்வு கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார்.
இரண்டும் முக்கியம்
ஐபிஎல் தொடருக்குப் பின் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் இரண்டையும் சிந்தித்து அதற்கேற்ப தோனி ஓய்வெடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
முதுகுப் பிடிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.
ரசிகர்கள் எண்ணம்
அதற்கு அடுத்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பி ஆடி வருகிறார் தோனி. அப்படியென்றால் காயம் குணமாகிவிட்டது என ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். ஆனால், நிலைமை அப்படி இல்லை என தோனி கூறியதன் மூலம் தெரிய வந்துள்ளது.
எப்போது ஓய்வு?
தற்போதைய சூழ்நிலையில், முக்கியத்துவமற்ற லீக் போட்டிகளின் போது தோனி ஓய்வெடுக்க அதிக வாய்ப்புள்ளது. எனினும், பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியின் போது தோனி காயமின்றி சரியாக ஆடவேண்டுமே என்ற கவலை ரசிகர்களுக்கு உள்ளது.