விக்கெட் சரிவு
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி சடசடவென விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. 6 ஓவர்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து, அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து வந்தது. அப்போது 12வது ஓவரை வீச வந்தார் அமித் மிஸ்ரா.
2 விக்கெட்கள்
அந்த ஓவரின் 2வது பந்தில் ஸ்ரேயாஸ் கோபால், 3வது பந்தில் அடுத்து வந்த பேட்ஸ்மேன் பின்னி ஆட்டமிழந்தனர் . இதனால், 4வது பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிஸ்ராவுக்கு கிடைத்தது. அவரும் அதற்கேற்ப திட்டமிட்டு பந்து வீசினார். அடுத்து வந்த பேட்ஸ்மேன் கெளதம், பந்தை தூக்கி அடித்தார்.
கேட்ச்சை விட்ட பவுல்ட்
பந்தை கேட்ச் பிடிக்க இரு வீரர்கள் முயன்றனர். ஒருவர் ட்ரென்ட் பவுல்ட். மற்றொருவர் ரூதர் போர்டு. ட்ரென்ட் பவுல்ட், பந்தை பிடிக்க ஆயத்தமாக, ரூதர் போர்டு விலகிக் கொண்டார். ஆனால், பவுல்ட் பந்து வரும் பாதையை கணிக்கத் தவறி, பந்தை எகிறி கேட்ச் பிடிக்க முயன்று தோல்வி அடைந்தார்.
மன்னிப்பு
எளிய கேட்ச்சை பவுல்ட் கோட்டை விட்டதால் செமையாக கடுப்பானார் அமித் மிஸ்ரா. போட்டிக்கு பின் இது குறித்து பேசிய அமித் மிஸ்ரா, தான் பவுல்ட்டிடம் ஏன் எளிதான கேட்ச்சை கோட்டை விட்டாய்? என கேட்டேன். அவர் 2-3 முறை என்னிடம் மன்னிப்பு கேட்டார். சரி, பரவாயில்லை என்றேன் எனக் கூறினார்.
வாய்ப்பு
அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் இதுவரை 155 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் அமித் மிஸ்ரா. நான்காவது ஹாட்ரிக் எடுத்திருந்தால், மேலும் அவரது சாதனைப் பட்டியல் அரிதான ஒன்றாக மாறி இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது.