தடை
2016, 2017 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018இல் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆட வந்த போது, கடந்த காலங்களைப் போல சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
சந்தேகம்
மேலும், 2018 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி, தன் பழைய வீரர்களை குறி வைத்து எடுத்தது. அதனால், வயதான வீரர்கள் அதிகம் நிறைந்த அணியாக விளங்கிய சென்னை அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி இருந்தது.
சாம்பியன்
அதையெல்லாம் முறியடித்து, 2018 ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணியாக மாறியது சென்னை. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தோனியின் படை. சரி, ஒரு வருடம் கழித்து 2019இல் சென்னை அணி அதே சாம்பியனாக இருக்குமா?
மிரள வைத்தது
ஆம், நாங்கள் சாம்பியன் தான் என மற்ற அணிகளை எச்சரித்துள்ளார் தோனி. 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்த சென்னை அணி 70 ரன்களில் அந்த அணியை ஆட்டமிழக்கச் செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அனுபவ வீரர்கள்
தோனி தான் அனுபவம் நிறைந்த கேப்டன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதை கணித்த தோனி, தெளிவாக, ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா என மூன்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கினார்.
சுழல் மிரட்டல்
அவர்களும் பெங்களூர் அணியை புரட்டி எடுத்தனர். சென்னை அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே 8 விக்கெட்கள் சாய்த்தனர். 71 ரன்கள் என்ற சிறிய இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி மற்ற அணிகளுக்கு சுழல் மிரட்டல் விடுத்துள்ளது.
அழுத்தமான பதிவு
இனி சேப்பாக்கம் வரும் அணிகள் தோனியின் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தங்களை தயார் செய்து கொண்டு தான் வர வேண்டும். அதே போல, ஒரு சாம்பியன் அணியை எதிர்கொள்கிறோம் என்ற எண்ணத்துடனும் வர வேண்டும் என்பதை தோனி அழுத்தம் திருத்தமாக முதல் போட்டியில் பதிவு செய்துள்ளார்.