மோசமான கேப்டன்சி
பெங்களூர் அணியின் தோல்விகளுக்கு கேப்டன் கோலியின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் கோலி. அதே போல, தோனி கேப்டன்சியில் கில்லி என்பதை முதல் போட்டியில் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
பழைய ஃபார்முலா
முதல் போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கிறது என்பதை சரியாக ஊகித்த தோனி மூன்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கினார். ஆனால், கோலி அதை கணிக்கத் தவறினார். எப்போதும் போல, மூன்று வேகம் + இரண்டு சுழல் என்ற ஃபார்முலாவை பயன்படுத்தினார்.
சென்னையின் சுழல்
மேலும், தோனி முதல் ஓவரில் இருந்தே சுழற் பந்துவீச்சாளர்களை பந்து வீசச் செய்தார். அது பெரிய அளவில் பலன் அளித்தது. கோலி, டி வில்லியர்ஸ் போன்ற உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களே தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்தனர்.
சாஹல்
மறுபுறம், கோலி தனது அணியின் பந்துவீச்சின் போது தோனியை பின்பற்றி முதல் ஓவரில் சாஹலை பந்துவீசச் செய்தார். சாஹல் 1 விக்கெட் எடுத்து ரன்னைக் கட்டுப்படுத்தினாலும், சென்னை அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் போல தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை.
இருவர் மட்டுமே
மேலும், சாஹல், மொயீன் அலி என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால், கோலியால் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீச்சை கொண்டு செல்ல முடியவில்லை.
வேகத்திலும் திணறல்
வேகப் பந்துவீச்சிலும் பார்மில் இல்லாத உமேஷ் யாதவ், அனுபவம் குறைந்த முஹம்மது சிராஜ் மற்றும் புதிய வீரர் நவ்தீப் சைனி ஆகியோரை வைத்துக் கொண்டு திணறினார் கோலி.
போட்டியின் முடிவில்..
முதல் போட்டியின் முடிவில் கோலியின் கேப்டன்சியில் இருந்த குறைகளும், தோனியின் அனுபவமும் மற்றும் திறன் வாய்ந்த கேப்டன்சியும் மிக அப்பட்டமாக தெரிந்தது. கோலியின் பலம் அவரது பேட்டிங் மற்றும் ஆக்ரோஷம். அவரது பலவீனம் கேப்டன்சி என்பதும் தெளிவாக தெரிந்தது.
கற்றுக் கொள்வாரா?
முதல் போட்டியில் அணித் தேர்வு, அனுபவ வீரர்களுக்கு முக்கியத்துவம், பீல்டிங் நிறுத்துவது, பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, டிஆர்எஸ் கேட்பது என பலவற்றை களத்தில் வைத்து கோலிக்கு பாடம் எடுத்துள்ளார் தோனி. ஆனால், கோலி இதையெல்லாம் கற்றுக் கொள்வாரா?